இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 மே, 2011

புதிய பொருளாதாரக் கொள்கையின் சிரழிவுகள்

இந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத் தாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத் தேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர்.
சுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒரு சனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும் என்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடுத்து ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி "மன்னர் மானிய ஒழிப்பு" பெரிய தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்கல்" என்ற திட்டங்களைச் செயல்படுத்தினர். "வறுமையே வெளியேறு" என்று முழங்கினார். நேரு 19 ஆண்டுகளும் இந்திரா காந்தி 17 ஆண்டுகளும் முடிசூடா மன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டாகவில்லை.
நேருவின் பேரன் இராசிவ் காந்தி 1984இல் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன்னுடைய அம்மாவைவிட பாட்டனை விட வேகமாகப் பேசினார். இந்தியா, அய்ரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக் காலத்தைத் தவறவிட்டு விட்டது. இப்போது தகவல் தொழிழ்நுட்ப யுகம். இதை இந்தியா தவறவிடக் கூடாது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று கூறி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டினார். தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கின்ற புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான வலிமையான அடித்தளம் அமைத்தவர் அவரே!
குப்பை மேட்டிலிருந்த ஒன்று கோபுரக் கலசமானதுபோல் 1991இல் இராசிவ்காந்தி கொலையுண்டதால் நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். உலக வங்கியிலும் பன்னாட்டு நிதியத்திலும் பெரும் பதவிகள் வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இவர்கள் இருவரும் உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் அமெரிக்காவும் இடுகின்ற கட்டளைகளைத் தலைமேல் ஏற்று இந்தியாவின் சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின் பெருந்தொழில் வணிக நிதிக்குழுமங்களுக்கு முழுமையாகத் திறந்துவிட்டனர்.
1989 இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவலாகவும், உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும் விளங்கிவந்த சோவியத் ஒன்றியம் 1990இல் வீழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது. இந்தப் பின்னணியில் உலக மயத்திற்கு மாற்று இல்லை என்ற பரப்புரை வளர்முக நாடுகளின் மக்களிடையே ஊடகங்களாலும், படித்த- பணக்கார ஆளும் வர்க்க அறிவாளிகளாலும் செய்யப்பட்டது.
அதோபார்! மரத்தின் உச்சியில், கிளையில் தேன் கூடு இருக்கிறது; அதற்கு நேர் கீழகாக நின்று கொள்; தேன் சொட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள். இப்பிறவியில் வருணாசிரம் உனக்கு விதித்துள்ள கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! என்று இந்து ஆதிக்க வாதிகள் உழைக்கும் கீழ்ச்சாதி மக்களுக்குச் சொன்னதையே சற்று மாற்றிச் சொல்கிறார் இன்றைய "சனநாயக" அரசியல்வாதிகள்.
இற்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி (2007-2012) 8 விழுக்காட்டை எட்டிவிட்டது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டக்காலத்திற்குள் இது 10 விழுக்காடு என்ற நிலையை எய்திவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 7000 என்ற நிலையிலிருந்து 15000 என்று உயர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் உறுதிப் பாடான வளர்முக நிலையில் இருப்பதன் அடையாளம் இது. வெளிநாட்டு மூலதனம் குவிதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேவைக்கு மேல் உள்ளது. மொத்த விற்பனை விலை உயர்வு என்பது 5 விழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அணு ஆயுத வல்லரசாகிவிட்டது. 2020 இல் மாபெரும் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்பன போன்ற செய்திகள் நாள்தோறும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் ஏழை எளிய மக்களாக இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதே நம் கேள்வி!
வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி
புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பதே கண்கூடான உண்மையாக இருக்கிறது. எனவே இது வேலைவாய்ப்பு இல்லா வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படும் குற்றச் சாட்டை உலகமயமாக்கலின் தீவிர ஆதரவாளர்களால் கூட மறுக்க முடியவில்லை. மேலும் இது இருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பது இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் தம் வேலையை இழந்துள்ளனர். அதிக மூலதனமும் உயர் தொழில் நுட்பமும் கொண்டதாக உற்பத்தி முறை மாற்றப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொருள்களின் உற்பத்தி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சேவைப்பிரிவு முதன்மை நிலையைப் பெற்றுவிட்டது. இதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் தன் செல்வாக்கை இழந்து வருகின்றன.
மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் விழுக்காடு
1978 2000பிரிட்டன் 39.1 25.5அமெரிக்கா 31.1 22.9சப்பான் 35.1 31.4கொரியா 29.1 28.4சினா 17.5 22.0இந்தியா 13.0 16.0
1950-70 காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் முதன்மையானதாக இருந்தது. அதன்பின், தகவல் தொழில்நுட்பமே (Information Technology-IT) உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் மேல் தட்டினராக, பணம் படைத்தோராக உள்ளவர்களின் துய்ப்பிற்காக பொருள்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், தொலைபேசி, கைபேசி கணிணி, மற்ற ஆடம்பரப்பொருள்கள் முதலானவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகச் சந்தை முதல் நிலையில் உள்ள 200 பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 200இல் 83 அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள்.
முதலாளிய உற்பத்தி முறையுடன் உருவான தொழிலாளர் வர்க்கம் 1800க்குப்பின் தொடர்ந்து கடுமையாகப்போராடிப் பெற்ற 8மணிநேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, நிலையான வேலை, குறிப்பிட்ட அளவு ஊதியம், ஊதிய உயர்வு, போனசு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வைப்பு நிதி முதலானவை புதிய பொருளாதாரக் கொள்கையால் பறிக்கப்படுகின்றன. சேவைப்பிரிவுகளில் சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சப்பான் பன்னாட்டு நிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் 2005 சூலை மாதம் சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை அரியானா காவல்துறை கடுமையாகத் தாக்கியது. தங்கள் சங்கத்தை ஹோண்டா நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று மட்டுமே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 63 தொழிலாளர்களின் மண்டை உடைந்தது. 400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் மனைவியரும் அன்னையரும் காவல் துறையுடன் மோதிடத் துணிந்து நின்றனர். இதைப் பற்றியெல்லாம் மய்ய அரசு வருந்தவில்லை. சப்பான் நாட்டின் மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தால் அந்நிய நாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வருவது தடைப்படுமே என்று நாடாளுமன்றத்தில் தன் கவலையைத் தெரிவித்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறுகிறார் மேற்கு வங்க முதுலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா!
100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள பிரிவை (V(b)) நீக்கிவிட மத்திய அரசு முயன்று வருகிறது. 100 தொழிலாளர்கள் என்ற வரம்பை 1000 தொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்று 2001-02 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தின் முன்வைத்து ஆற்றிய உரையின் போது அன்றைய நிதி அமைச்சர் யசுவன் சின்கா கூறினார். இப்படிச் செய்தால் 90 விழுக்காடு தொழிற்சாலைகள் தொழிற்தகராறுச் சட்டத்திலிருந்து விடுபட்டுவிடும். 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற் சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது 60 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துவிடும். தொழிற்சங்க இயக்கம் அடியோடு முடங்கிவிட்டது. மே நாள் ஊர்வலங்கள் கூட நடத்தப்படுவதில்லை. மக்கள் திரள் போராட்டங்களில் முன்னிலை வகித்த நாட்டின் சனநாயகக் கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய தொழிலாளர் இயக்கம் நலிந்து கிடக்கிறது.
மய்ய அரசும், மாநில அரசும், நீதித்துறையும் தொழிற் சங்க இயக்கங்களை ஒடுக்குகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது முதலமைச்சராக இருந்த செயலலிதா ஒன்றரை இலக்கம் அரசு ஊழியர்களை ஒரே சமத்தில் பணியிலிருந்து தூக்கி எறிந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் சனநாயக உரிமைப் பறிப்புப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களைச் சாடியது.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் இன்று 15 வயது முதல் 59 வயதில் 40கோடி பேர்கள் உள்ளனர். இவர்கள் உழைக்கும் வயதினர் (Work force) எனப்படுகின்றனர். 0-15 வயதில் 20 கோடிக் குழந்தைகளும் சிறுவர்களும் உள்ளனர். இவ்விருபிரிவினரும் சேர்ந்து 60கோடி. எனவேதான் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன் பேசப்படுகிறது. ஆனால் தற்போது அழைக்கும் வயதினராக இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் மற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனவா? இளைஞர் பருவத்தை நெருங்கிக் கொண்டீருப்பவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படவுள்ளதா?
உழைக்கும் வயதினராக உள்ள 40கோடி மக்களுள் மய்ய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் அமைப்புசார் தொழிலாளர்களாக உள்ளவர்கள் 3கோடி பேர்கள் உள்ளனர். தனியார் துறைகளில் முறையாக மாத ஊதியம் பெறுகின்ற ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பவர்கள் 3கோடி. இந்த 6 கோடிப் பேர்களும் அவர்களின் குடும்பங்களும் தரமான அடிப்படை வசதிகளைப் பெறும் நிலையில் உள்ளனர்.
சுயதொழில் செய்வோராக 20 கோடிப்பேர்களும் அன்றாடம் கூலி வேலைசெய்து பிழைப்போராக 14 கோடி மக்களும் இருக்கின்றனர். கூலி வேலை செய்வோராக இருப்பவர்களில் 95 விழுக்காட்டினர் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினரே ஆவார். சுயதொழில் செய்வோருள் வெரும்பான்மையினர் சிறு விவசாயிகளாகவும், குத்தகைக்குப் பயிரிடுவோராகவும் சிறிய அளவில் தொழில்கள், வணிகம் செய்வோராகவும் உள்ளனர். 40 கோடிப்பேர்களில், 4 கோடிப்பேர்கள் இந்திய அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலைக்காக 54 இலக்கம் பேர் பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 70 இலக்கம் பேர் வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர்.
வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றதும் 10ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்திற்குள் 5 கோடி வேலைகளைப் புதியதாக உருவாக்கி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையே ஒழித்துவிடப் போவதாக அறிவித்தார். வேளாண்மை போன்ற அடிப்படைத் தொழிழ்களில் 92.6 இலக்கம், தொழிற் துறைகளில் 145 இலக்கம், சேவைப்பிரிவுகளில் 252 இலக்கம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று விரிவானதோர் பெரிய நூலை வாஜ்பாய் அரசு வெளியிட்டது. ஆனால் வேலையில்லாதார் எண்ணிக்கைதான் பெருகிவருகிறது.
புதியதாக உருவாகின்ற வேலைவாய்ப்பு என்பது பெரிய மூலதனத்துடன் பன்னாட்டு நிறுவனங்களால், இந்தியப் பெருமுதலாளிகளால் தொடங்கப்படும் சேவைப்பிரிவுகளிலும், தானியங்கிவகைத் தொழிழ்களில் மட்டுமே உருவாகிறது. சில ஆயிரம் இடங்களுக்கான வேலையாக மட்டும் இவை உள்ளன. செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் நோக்கியா, ஹீரோ ஹோண்டா, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில நூறு கோடிகள் முதலீட்டில் தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்படும் காட்சிகள் ஊடகங்களில் பெரிதாகக்காட்டப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் இந்தோனேசியாவின் சலீம் பெருங்குழுமம் ரூ.44,000 கோடிக்கு முதலீடு செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் 30,000 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5கோடி முதலீடு செய்தால் ஒருவருக்கு வேலை என்பது எவ்வளவு கொடிய நிலை! சலீம் குழுமம் என்ன தொழிலில் முதலீடு செய்யப்போகிறது? தொழில்நுட்பப் பூங்கா, அறிவுப்பூங்க, (Knowledge park) பெரிய வணிகவளாகம், உடல்நலப்பூங்கா (Health park) போன்றவைகளைத் தொடங்க மேற்கு வங்க அரசு 5400 ஏக்கர் நிலத்தை அளிக்கிறது. இவற்றால் மேற்கு வங்கத்தில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்? கொல்கத்தாவில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்? கொல்கத்தாவில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் மருத்துவம் செய்து கொள்ளக் கொண்டு வரப்படும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. பெரிய செய்தியாக இது வெளிவருகிறது. சலீம் குழுமம் தொடங்கும் நட்சத்திர மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்படுமா?
வேளாண்மை
அமெரிக்காவில் 1950இல் 60இலக்கம் வேளாண் பண்ணைகள் இருந்தன. இவற்றைச் சார்ந்து 25 விழுக்காடு மக்கள் இருந்தனர். இப்பண்ணைகள் தமக்குள் இணைந்து 2000இல் 20 இலக்கம் பணைகளாகி விட்டன. 2 விழுக்காடு மக்களே இவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர். அமெரிக்காவில் வேளாண்மை, வணிக வேளாண்மை (Agro-bussiness) யாகிவிட்டது. இந்திய நாட்டிலும் வணிக வேளாண்மையை உருவாக்கிடவே பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு மாநில அரசுகள் அதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களை கார்க்கில், கான்டினன்டல் போன்றவை வணிக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளன. உலக தானியச் சந்தையில் 3இல் 2 பங்கு இவ்விரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூச்சி மருந்துச் சந்தையில் 84% பத்து பன்னாட்டு நிறுவனங்களிடம் உள்ளது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 2 விழுக்காடு மட்டுமே! ஆனால் சேவைப்பிரிவின் பங்கு 72%.
இதேபோல் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு பிரான்சில் 2% செருமனியில் 1%, பிரிட்டனில் 2% இந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்வோர் எண்ணிக்கை முறையே 6%, 3%, 3% (உலக வங்கி அறிக்கை 2000) ஆகும். ஆனால் அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டில் 360 மில்லியன் டாலர் (ரூ. 15,20,000 கோடி) வேளாண் மானியம் தரப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற இந்நாடுகளின் வேளாண்மையின் உயர் விளைச்சல் அதிக அளவில் இடுபொருள்கள் சார்ந்ததாகவும், முழுவரும் இயந்திரமயமானதாகவும் ஆகிவிட்டது. இடுபொருள்களான விதை, உரங்கள், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, இயந்திரங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும்பகுதி வேளாண் மானியம் போய்ச் சேருகிறது.
இந்தியாவிலும் முதலாளிய உற்பத்தியில் தயாரிக்கப்படும் இடுபொருள்கள் சார்ந்ததாக வேளாண்மை ஆக்கப்பட்டுவிட்டது. 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட பசுமைப்பருட்சி மூலம் மேலைநாட்டு வேளாண்மை முறைகள் இங்கே புகுத்தப்பட்டன. இதனால் புன்செய் வேளாண்மை சிர்குலைந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்குரிய, சூழலுக்கு ஏற்ற, விதைகள் அழிந்து விட்டன. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் நஞ்சால் நிலமும், நீரும் சுற்றுச் சூழலும் பாழ்பட்டுவிட்டன. இயந்திர மய வேளாண்மை வேளாண் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தது. விளைச்சலில் பெரும் தேக்கம் ஏற்பட்டுவிட்டது. 1998 முதல் 2003 காலத்தில் 1,10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று நடுவண் அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் 2006 சூலை மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 1995க்குப்பிறகு மய்ய அரசும், மாநில அரசுகளும் வேளாண்மையை அடியோடு புறக்கணித்தன. வேளாண் சந்தையில் அறுவடைக் காலங்களில் தனியார் நிறுவனங்கள் குறைந்த விலையில் விளை பொருள்களை கொள்முதல் செய்து பிறகு அதிக விலைக்கு விற்பது என்பது தங்கு தடையின்றி நடக்கிறது. அதனால் கோதுமை, பயறுவகைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் 60 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பியே வாழ்கின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கை இவர்களை வேளாண் சார்ந்த தொழில்களிலிருந்து விரட்டிக் கொண்டிருக்கிறது.
கல்வி
"நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் 67 விழுக்காட்டினர் எழுத்தறிவற்றவர்களாக இருக்கின்றனர். அல்லது ஓரளவு மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர்" என்று பிரதமர் மன்மோகன்சிங் 6.10.2004 அன்று தில்லியில் சிறந்த தொழிலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசினார். இந்தியாவில் ஆண்டுதோறும் சில இலக்கம் பொறியியல் பட்டதாரிகள் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டம் 60,000 பொறியியல் பட்டதாரிகள் இப்போது வெளி வருகின்றனர். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலக்கம் இடங்கள் உள்ளன. பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்களே தவிர, எங்கள் தேவைகேற்ற திறன் கொண்டவர்களாக அவர்கள் இல்லை; எனவே எங்கள் நிறுவனங்களின் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று பன்னாட்டு நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்கள் கூறுகின்றனர். நகர்ப்புறங்களில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பணக்காரர்கள், முதலாளிகள், பெரிய வணிகர்களின் குடும்பங்களிலிருந்து தரமான ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சில ஆயிரம் பேர்கள்தாம் ஆண்டுதோறும் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலையில் சேருகின்றனர். மாதந்தோறும் இருபதாயிரம் முதல் அய்ம்பது ஆயிரம் சம்பளம் தரப்படும் சில ஆயிரம் வேலை இடங்களுக்காக இற்தியா முழுவதும் தாய்மொழி வழிக்கல்வி புறக்கணித்தவிட்டு கோடிக்கணக்கான குடும்பங்கள் தம்மிடம் உள்ள சிறு உடைமையை இழந்து, கடன்பட்டு, தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர். ஏகாதிபத்திய தீப்பந்தத்தில் விட்டில் பூச்சிகளாய் இந்த இளைஞர்களின் எதிர்காலம் பொசுங்கிக் கொண்டிருக்கிறது.
மறுபுறத்திலோ உழைக்கும் மக்களுக்கு தொடக்கக் கல்வியும் கிடைக்காத நிலை நீடிக்கிறது. 1960 க்குள் 14வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவயக் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. 2001இல் கல்விபெறும் உரிமை அடிப்படை உரிமையில் சேர்க்கப்பட்டது. முதல் வகுப்பில் சேரும் நூறு மாணவர்களில் 35பேர்கள் அய்ந்தாம் வகுப்பை முடிக்கு முன்னரே பள்ளியை விட்டு நின்று விடுகின்றனர். 54 விழுக்காட்டினர் 8ஆம் வகுப்பிற்குள் நின்று விடுகின்றனர். பள்ளிகளில் இடை நிற்கும் (dropouts) மாணவர்கள், பட்டியல்குல, பழங்குடி, சூத்திர உழைப்புச்சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது மனங்கொள்ளப்பட வேண்டும்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் படி மக்களுக்கும் கல்வி தரும் பொறுப்பிலிருந்து அரசு விலகி விடுகிறது. எனவே தனியார் மழலையர் பள்ளிகள் முதல் சுயநிதிக் கல்லூரிகள் வரை கல்வியின் பெயரால் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டு வருகின்றனர். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், பட்டதாரி ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் என்ற பெயர்களில் தமிழ் நாட்டில் உழைக்கும் மக்களின் குடும்பங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் கொள்ளையில் பங்கு தரப்படகிறது. கல்விச் செலவு ஏழை எளிய மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சுமையாக உள்ளது.
மருத்துவம்
அறிவுசார் சொத்துரிமை என்ற (TRIPS) பெயரில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பகற் கொள்ளையடிக்க இந்தியச் சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. 1979இல் மருந்து விலைக்கட்டப்பாட்டு ஆணையத்தின் (DPCO) கீழ் 354 மருந்துகள் இருந்தன. பெரும்பாலான மருந்துகள் அதன் உற்பத்திச் செலவை விடப்பத்து மடங்கு முதல் நூறு மடங்கு வரையில் அதிய விலையில் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்நிலையில் நடுவண் அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் மருந்துகளின் விலையைக் குறைக்கப் போவதாக அறிவித்திருப்பதைப் போன்ற மோசடி வேறெதுவும் இல்லை!
உலகில் எந்த நாட்டிற்கும் இணையான உயர் மருத்துவ வசதிகள் சென்னை, மும்பை, தில்லி போன்ற பெரு நகரங்களில் கிடைக்கின்றன என்று பெருமையுடன் பேசப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி போன் றநகரங்களில் கூட இதயநோய் அறுவைக்கு ஒன்றரை இலட்சம் பணம் வாங்கப் படுகிறது. பெரிய செலவு பிடிக்கும் நோய் வந்தால் மருத்துவச் செலவினால் அந்த குடும்பமே அழியக் கூடிய நிலை ஏற்படுகிறது. சாதாரண நோய்களுக்குக் கூட அதிகப் பணம் பிடுங்கும் கழுகுகளாக மருத்துவர்கள் உள்ளனர். தொழில் வளர்ச்சி பெற்ற அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் மருத்துவச் செலவில் பெரும்பகுதியை அரசே ஏற்றுக் கொள்கிறது. பிறந்தது முதல் பள்ளிப் பருவம் வரையில் குழந்தைகளின் மருத்துவச் செலவு முழுவதையும் முதலாளிய அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன.
இந்தியாவில் கிராமங்களில் 65 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. தமிழ்நாட்டில் 25 விழுக்காடு வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. இந்தியக் கிராமங்கள் இருண்டு கிடக்கின்றன.
மக்களின் அடிப்படைத் தேவைக்கான கல்வி, மருத்துவம், மின்சாரம், தூய்மையான சுற்றுப்புறம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், குறைந்த கட்டணத்திலான போக்குவரத்து, நல்லசாலைகள் ஆகியவற்றை அளிக்க வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். மய்ய அரசும் மாநில அரசுகளும் இக்கடமையை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. ஆனால் இந்திய முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றன. சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
புதிய பொருளாராரக் கொள்கை உழைக்கும் வெகுமக்களின் வாழ்வாதாரங்களை மேலும் பறிப்பதற்காகவே இருக்கிறது. மக்களுக்கானதாக அரசை மாற்றாத வரையில் விடிவோ, விடுதலையோ கிடைக்காது.
இலத்தின் அமெரிக்க நாடுகள் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசப் பாதையைக் காட்டிக் கொண்டிருக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக